கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: முதல்வர் திறந்து வைத்த மேம்பாலங்கள்
கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: முதல்வர் திறந்து வைத்த மேம்பாலங்கள்

கோவை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: முதல்வர் திறந்து வைத்த மேம்பாலங்கள்

 ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (11.6.2022) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில் ரூ.230 கோடி செலவில் இராமநாதபுரம் மற்றும் சுங்கம் முக்கிய சந்திப்புகளில் தே.நெ.எண். 67-ல் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் மற்றும் அதே தேசிய நெடுஞ்சாலையில் ரூ.60 கோடி செலவில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில்,  வணிகம், சுற்றுலா, போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை பராமரிப்பதும், மேம்பாடு செய்வதும் மற்றும் கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலை அமைப்பதும் நெடுஞ்சாலைத் துறையின் முக்கிய பணிகளாகும்.

தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

அந்த வகையில், இராமநாதபுரம் மற்றும் சுங்கம் சந்திப்பில் ரூ.230 கோடி செலவில் 3.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

இப்பாலம் திறக்கப்படுவதால், இராமநாதபுரம், ஓலம்பஸ் மற்றும் சுங்கம் ஆகிய மூன்று முக்கிய சந்திப்புகள் மற்றும் அல்வேனியா பள்ளி சந்திப்பு, சவுரிபாளையம் சந்திப்பு, புளியகுளம் பிரிவு சாலை சந்திப்பு, வானொலி நிலையம் சந்திப்பு, பந்தய சாலை சந்திப்பு, வாலாங்குளம் சாலை சந்திப்பு ஆகிய ஆறு இதர சந்திப்புகளிடையே உள்ள போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, சிக்னல் மற்றும் சந்திப்புகளில் வாகனங்கள் நின்று செல்வதால் ஏற்படும் காலதாமதமும் தவிர்க்கப்படும். 

அத்துடன் விபத்துக்களை தவிர்ப்பதற்கும் இது உதவும். மேலும், சிங்காநல்லூரிலிருந்து அரசு மருத்துவமனை, இரயில் நிலையம், நகர்மண்டபம், உக்கடம் ஆகிய பகுதிகளுக்கு மக்களால் போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல முடியும். இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவர். 

மேலும், கோயம்புத்தூர் நகரில், கவுண்டம்பாளையம் சந்திப்பில் ரூ.60 கோடி செலவில் 1.17 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள 4 வழித்தட மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இப்பாலம் திறக்கப்படுவதால், கவுண்டம்பாளையம் மற்றும் நல்லாம்பாளையம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும். இதன்மூலம் கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் வாகனங்கள் எளிதாக செல்லமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com