

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை(ஜூன் 23) சென்னையில் நடக்கவுள்ள நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் இபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் நாளைய பொதுக்குழு கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினர்,.
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் தரப்பு கலந்துகொள்ள வேண்டும் என்றும், அதிமுகவில் உள்ள அனைவருமே கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பது தான் தங்களுடைய விருப்பம் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஒற்றைத் தலைமையில் எடப்பாடி பழனிசாமியை அமர வைக்க தமிழகம் முழுவதும் உள்ள 17 அணி சார்ந்த 75 மாவட்ட நிர்வாகிகள் இபிஎஸ்-க்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், பாதை தவறிய கால்கள் விரும்பிய ஊர்கள் சென்றதில்லை என்ற எம்ஜிஆர் பாடலை முன்வைத்து ஓபிஎஸ் தவறான பாதையில் செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் தப்பிற்கு மேல் தப்பை செய்வதாகவும், மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை தலைமை ஏற்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிச்சாமியிடம் சமர்பித்துள்ளதாக அவர் கூறினார்.
கேபி முனுசாமி: கட்சி நிர்வாகிள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டபடி பொதுக்குழு நடைபெறும். தலைவர்கள் உறுதியாக கலந்துகொள்வார்கள். ஒருவருக்கொருவர் கடிதம் அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
சைதை துரைசாமி: அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இது ஒரு மக்கள் இயக்கம், எம்ஜிஆர் கட்சியை விட்டு நீக்கிய பிறகு ஒரு யுக புரட்சி நடைபெற்றது.அக் 1-ம் தேதி அதிமுக எனும் இயக்கம் உருவாக விதை போடப்பட்ட நாள். இந்த கட்சி உருவாக பொதுமக்களும் தொண்டர்களும்தான் காரணம்.
அதிமுக கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். அதிமுகவை பாதுகாக்க எடப்பாடி பழனிசாமியுடன் எங்களது உணர்வுகளை பதிவு செய்துவிட்டு வந்துளோம்.
ஒற்றுமையாக இந்த இயக்கம் செயல்படுத்தவதற்கான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறேன். அதற்கு எடப்பாடி பழனிசாமியின் பதில் திருப்திகரமாக இருந்தது.
மைத்ரேயன்: எனக்குப் பின்னாலும் 100 ஆண்டுகள் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்படும் என ஜெயலலிதா சொன்னார். அதற்கு ஏறாற்போல் தகுதியும் ஆற்றலும் படைத்த ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
அதிமுக ஜனநாயக இயக்கம் எனும் அடிப்படையில் 100 க்கு 99 விழுக்காடு பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றைத் தலைமை என முடிவு செய்துள்ளனர். உறுதியான வலிமையான தலைமையை எடப்பாடி பழனிசாமி தருவார் என நம்புகிறோம். ஒற்றைத் தலைமைக்கான பொறுப்பு என்ன என்பது நாளை பொதுக்குழுவில் தெரியவரும். பொதுக்குழுவின் முடிவே இறுதியான முடிவு. அதிமுகவில் சசிகலாவின் பங்கு இருப்பதாக தெரியவில்லை என்றார்.
வளர்மதி: அனைவரின் ஆதரவோடு பொதுக்குழு நாளை நடைபெறும். ஒருங்கிணைப்பளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இணைந்தே கையொப்பமிட்டு பொதுக்குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஓபிஎஸ்-யை எப்படி ஓரம்கட்ட முடியும், வருபவர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என ஆதரவை தெரிவித்து வருக்கின்றனர். இது எப்படி அராஜக போக்கு ஆகும்? 1972க்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி தற்போது அதிமுகவில் வந்துள்ளது. ஓபிஎஸ்-ன் செயல்பாடுகளால் தொண்டர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. கட்சிக்கு இரண்டு ட்ராக் இருந்தால் சரியாக இருக்காது, ஒரே ட்ராக்கில் கட்சி பயணிக்க வேண்டும். யார் பொதுச்செயலாளர் என்பது 24 மணி நேரத்தில் தெரியவரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.