இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் செல்லாது: ஓ.பன்னீர்செல்வம்

அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெறும் நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
ஓ.பன்னீா்செல்வம்
ஓ.பன்னீா்செல்வம்

அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெறும் நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக சட்ட, திட்ட விதி 20A(v)-ன் கீழ் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதன்படி, இருவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால், இருவருடைய ஒப்புதலுமின்றி, கையொப்பம் இல்லாமல், அதிமுக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம் என்ற பெயரில் கட்சியின் சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில், அதிமக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 27-6-2022 - திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம், கட்சியின் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். அதிமுக சட்டத் திட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் அதிமுகவையும், கட்சித் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

அதிமுக தலைமைக் கழக நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறும் என்று அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயா்கள் இடம்பெறாமல் அதிமுக தலைமைக் கழகம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. 

அறிக்கையின் இடது மேல்புறத்தில் தலைமை நிலையச் செயலாளா் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தலைமைக் கழக நிா்வாகிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தக் கூட்டம் கூட்டப்படுகிறது. தலைமைக் கழக நிா்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை பிரச்னை அதிமுகவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், இருவரது பெயரும் இல்லாமல் முதல் முறையாக இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com