திருவள்ளூர்: திருவள்ளூரில் காவல் துணைக்கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி சாலை தடுப்புச் சுவரில் மோதிய விபத்தினால், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து சென்னைக்கு சிமெண்ட் கலவை ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி சென்றது. அங்கு சிமெண்ட் கலவையை இறக்கி விட்டு, செவ்வாய்க்கிழமை காலையில் ஆந்திரம் நோக்கிச் சென்றது. இந்த லாரியை திருத்தணியைச் சேர்ந்த பாபு ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே லாரி வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தினால் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அந்தச் சாலையில் 3 மணிநேரம் வரையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், அமாவாசை தினம் என்பதால் வீரராகவர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசலால் சிக்கி அவதிக்குள்ளாகினர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், வேலைகளுக்கு செல்வோர்களும் பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான சிமெண்ட் கலவை லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.