/

அதிமுகவைப் பார்க்க வருத்தமாக உள்ளது: டிடிவி தினகரன்

அதிமுகவின் தற்போதைய நிலையைப் பார்க்க வருத்தமாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

News image

டிடிவி தினகரன்

Updated On :30 ஜூன் 2022, 3:48 pm IST

அதிமுகவின் தற்போதைய நிலையைப் பார்க்க வருத்தமாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு  நேற்று கடிதம் எழுதினார்.

அதில், அதிமுக வேட்பாளா்களுக்கான படிவங்களில் வியாழக்கிழமை மாலை 3 மணிக்குள் இருவரும் கையெழுத்திட்டு தோ்தல் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா். ஆனால், அந்தக் கடிதத்தை எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் வாங்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்திற்கு இன்று எடப்பாடி பழனிசாமி பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "கடந்த ஜூன் 27 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தது ஏன்? பொதுக்குழுவை நிறுத்த நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்தது ஏன்? அதிமுகவை செயல்பட விடாமல் தடுத்தவர் எழுதிய கடிதம் ஏற்புடையதல்ல. உள்ளாட்சி இடைத்தேர்தல் தொடர்பாக எனக்கு எழுதிய கடிதம் செல்லத்தக்கதல்ல. பொதுக்குழுவில் சட்டத்திருத்தங்கள் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் “தர்மயுத்தம் தொடங்கியபோது நண்பர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திந்தேன். அதன் பிறகு சந்திக்கவில்லை. பதவி கொடுத்த பின்புதான் எடப்பாடி பழனிச்சாமியின் உண்மையான குணம் தெரிந்தது. இன்னும்கூட அதிமுகவில் எனது ஸ்லீப்பர்செல்கள் இருக்கின்றனர். அதிமுகவின்  தற்போதைய நிலையைப் பார்க்க வருத்தமாக உள்ளது. எனக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள்  நரிக்கூட்டத்தில் சேர விரும்ப மாட்டோம்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.