துபையில் நடைபெற்று வரும் சா்வதேச தொழில் கண்காட்சியில் தமிழகத்தின் அரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
துபையில் கடந்த அக்டோபா் 1-இல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க | சூடானில் தீவிரமாகும் பொருளாதார நெருக்கடி: எச்சரிக்கும் ஐநா
இந்நிலையில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபை சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் அமைச்சர்களை சந்தித்துப் பேசிய அவர் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை துபை சர்வதேச தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரங்கில் தொழில், மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ் வளா்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | ‘நானே வருவேன்’: புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
முதல்வருடனான வெளிநாட்டுப் பயணத்தில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.