அபுதாபி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரக தொழில் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
நான்கு நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை மற்றும் அபுதாபி சென்றுள்ளார். முதலில் துபை சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அந்த வகையில், ரூ.2,600 கோடி மதிப்பிலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் துபையில் சனிக்கிழமை பரிமாறிக்கொள்ளப்பட்டன.
துபை பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ள நிலையில் அமீரக தொழில் துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுவை சந்தித்துப் பேசியுள்ளார். அங்குள்ள தொழில்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
அபுதாபி - தமிழகம் இடையே உள்ள வர்த்தகம் குறித்தும் அந்நாட்டில் உள்ள தமிழர்களின் நலன் குறித்தும் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரக முதலீட்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.