பொதுத்தேர்வு மையத்திற்கு ஆசிரியர்கள், தேர்வர்கள் செல்போன் எடுத்துவரத் தடை விதித்து அரசு தேர்வுகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மையத்தில் தேர்வர்கள், ஆசிரியர்கள் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மே 5ஆம் தேதி முதல் பிளஸ் 2, பிளஸ் 1, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபாடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
பொதுத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.