திருப்பூர்: திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், இரு மகன்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துமாரி (38). இவர் என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக திருப்பூர் நெருப்பெரிச்சல் அரசுப் பள்ளி வீதியில் உள்ள வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், இவர்களது வீட்டுக்கு ஒருவர் அடிக்கடி வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டிற்கு வந்த நபரோடு தகராறு ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்தில் அந்த நபர் மட்டும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து வீட்டு உரிமையாளர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாக இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு தலைமையில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துமாரியின் வீட்டிற்கு வந்த நபர் யார்? எதற்காக கொலை நடந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.