சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரங்களில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால், வானிலை மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடதமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் சராசரியாக 12 செ. மீட்டர் முதல் 21 செ. மீட்டர் வரை மழை பதிவாகும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் மிதமான மழை தொடர்ந்து நீடிக்கிறது.
காலை முதல் தற்போதுவரை அதிகபட்சமாக பெரம்பூரில் 12 செ. மீட்டர், தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், கும்பிடிப்பூண்டி, பொன்னேரி, ஆகிய பகுதிகளில் தலா 10 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக அயனாவரம் 9 செ.மீட்டர், நுங்கம்பாக்கம், சோழவரம், தக்கலை ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.