ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி தராத 47 இடங்களில் உளவுத்துறை அறிக்கைக்கு பின் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வழக்கில் நவம்பர் 4-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சியில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தரப்பு வாதிட்டது. 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக் கொள்வதாக இருந்தால் அனுமதி வழங்கத் தயார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது எனவும், நவம்பர் 6-ல் பல இடங்களில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.
பின்னர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருகிற நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையினருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என காவல்துறையினர் மீது ஆர்.எஸ்.எஸ். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இதையும் படிக்க: நவ.23-ல் பெங்களூரு-புணே இடையே முதல் விமானச் சேவை தொடக்கம்!
இந்நிலையில், இவ்வழக்கில் நவம்பர் 4-ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தெரிவித்துள்ளார்.