சென்னை: பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிவித்துள்ளது.
ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் சார்பாக நாள்தோறும் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.
பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வது.
இந்நிலையில் இடுபொருள்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி, ரூ.32 இல் இருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி ரூ.41இ ல் இருந்து ரூ.44 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு நவம்பர் 5 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்முதல் விலை உயர்வால் சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.