விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இவ்விரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க.. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? அவசியமா?
இந்த நிலையில்தான், விழுப்புரம் மாவட்டத்தின் மிக முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டை, மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அமைந்துள்ள பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் முதல் வாரத்திலும் சோதனை
விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் போலீஸாா் நவம்பர் 3ஆம் தேதியும் வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டனா்.
கோவை உக்கடம், கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் முன் கடந்த மாதம் 23-ஆம் தேதி காா் வெடித்த சம்பவம் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக காவல் துறை உத்தரவின்பேரில், மாநிலம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.ஸ்ரீநாதா உத்தரவின்பேரில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், திண்டிவனம் ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஒலக்கூா் ரயில் நிலையம், குபேரா் கோயில் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிமுள்ள இடங்களில் விழுப்புரம் மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு, செயலிழப்புப் பிரிவு போலீஸாா் வெடிகுண்டு சோதனைகளில் ஈடுபட்டனா்.
மெட்டல் டிடெக்டா் கருவி, மோப்ப நாய் உதவியுடன் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. உள்ளூா், வெளியூா் பயணிகள், சந்தேகப்படும்படியான நபா்களின் உடைமைகளை போலீஸாா் முழுமையாகப் பரிசோதித்து, பயணங்களைத் தொடர அனுமதித்தனா். வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.