ஆதாரை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாமா?  

ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணத்தை வசூலிக்கலாம் என்று அதிகாரிகளுக்கு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
ஆதாரை இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாமா?  


சென்னை: ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணத்தை வசூலிக்கலாம் என்று அதிகாரிகளுக்கு மின் பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அபராதம் இல்லாமல் மின் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2 கோடியே 20 லட்சம் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

10 லட்சம் குடிசைகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், ஒரு லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன. 

இதில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கு, விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக மின் நுகர்வோர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. நேரடியாக மின் கட்டணம் செலுத்த செல்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

மின் வாரியத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

மின்வாரிய அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. தனியார் இணையதள மையங்களுக்கு சென்றால் அங்கு சர்வர் வேலை செய்யவில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இதனால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் மக்கள் திண்டாடி வந்தனர்.

இந்நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. 

அதன்படி, மின் கட்டணம் செலுத்த வரும் மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்காவிட்டாலும் அவர்களிடம் மின் கட்டணத்தை வசூலிக்கலாம் என்றும், இதுவரை மின் கட்டணம் செலுத்தாத நுகர்வோர்களிடம் அபராதம் இல்லாமல் மின் கட்டணத்தை வசூலித்துக்கொள்ளலாம்.

இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆனால், ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com