சென்னை: தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருள்காட்சி இந்த ஆண்டு நடைபெறவிருக்கிறது.
இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அரசுப் பள்ளிகளில் அரையாண்டு விடுமுறையையொட்டி சுற்றுலா பொருள்காட்சி தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதனுடன் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறை நாள்களும் வரும் என்பதால் டிசம்பர் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் பொருள்காட்சி தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க.. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் 4 ஆண்டுகளில் 2,076 பேர் பலி
இந்த சுற்றுலா பொருள்காட்சியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க அழைப்பு விடுக்கவும் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா பொருள்காட்சி நடைபெறவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டுதான் நடைபெற்றது.
எனவே, இந்த ஆண்டு சுற்றுலாப் பொருள்காட்சியை நடத்த சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அனைத்து முன் ஏற்பாடுகளையும் இப்போதே தொடங்கிவிட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட்டு, டிசம்பர் முதல் வாரத்தில் பொருள்காட்சிக்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
தமிழக அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தொடா்ந்து 70 நாட்கள் இந்தப் பொருட்காட்சி நடைபெறவிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக பொருட்காட்சி நடைபெறவில்லை. இதனால் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சிறப்பாக நடத்திட தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சந்தீப் நந்தூரி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.