ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த மாணவர் தற்கொலை!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆன்லைன் ரம்மி: பணத்தை இழந்த மாணவர் தற்கொலை!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கல்லூரி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் அடுத்த கீரைத்தோட்டம் என்னும் பகுதியின் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் உடல் சிதைந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலையடுத்து திருச்சியிலிருந்து நிகழ்விடத்துக்கு சென்ற இரயில்வே காவல் துறையினர், நிகழ்விடத்தில் பார்த்தபோது இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்தும்,  தலை துண்டித்தும் உயிரிழந்து கிடந்தார். இளைஞர் யார் என்பதில் 2 மணி நேரத்திற்கு மேலாக விடை தெரியாத நிலையில், மணப்பாறை பேருந்து நிலையம் சுகாதார வளாகத்தில்  பணியாற்றி வரும் ரவி என்பவரது மகன் தான் என்பது அடையாளம் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து  காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தான் அதிர்ச்சியடையும் தகவல்கள் கிடைத்தது.

உயிரிழந்த இளைஞர், வையம்பட்டி ஒன்றியம் அமையபுரம் அடுத்த மலையாண்டிப்பட்டியை சேர்ந்த ரவியின் மூத்த மகன் (22) வயதுடைய சந்தோஷ் என்பது தெரியவந்தது. திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு B.E (EEE) படித்து வந்த சந்தோஷ், கடந்த 6 மாத காலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி வீட்டிலிருந்து நகை, பணம் ஆகியவற்றை வீட்டிற்கு தெரியாமல் எடுத்து சென்று விளையாட்டில் இழந்துள்ளாராம். 

வழக்கம்போல் கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.4) வீட்டிலிருந்த மோதிரம் காணவில்லை என்று பெற்றோர் சந்தோஷிடம் செல்போனில் பேசி கேட்டுள்ளனர். அதற்கு நான் நகை, பணத்துடன் வருகிறேன் என கோபமாக பேசியுள்ளார் சந்தோஷ். அதன்பின் நேற்று (அக்.5) இரவு 9.50 மணியளவில் “என்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான், அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்ததால் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.” என ஸ்டேட்டஸ் வைத்து விட்டு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். 

அதன் பின் சந்தோஷை பெற்றோர் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் தான் சந்தோஷ் ரயில் முன் பாய்ந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஷ் உடலை கைப்பற்றியுள்ள திருச்சி ரயில்வே காவல் துறையினர் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற உயிர்களை சூரையாடுவது ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல, ஆன்லைன் கொடூர விளையாட்டுகளும் தான். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை வந்தாலும், புதுப்புது பெயர்களில் இன்னமும் ஆன்லைன் கொடூர விளையாட்டுகள் இன்றைய இளைஞர்களின் கைகளில் தவழ்ந்துகொண்டு தான் இருக்க செய்கிறது. 

தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடைக்கு அமைச்சரவை ஒப்புதல் பெற்றுள்ள நிலையில் அதை விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே சந்தோஷ் பெற்றோர் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com