'323 பொறியியல் கல்லூரிகளில் இன்னும் 10% இடங்கள் கூட நிரப்பப்படவில்லை'

தமிழகத்தில் இரண்டு சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 323 கல்லூரிகளில் இதுவரை 10% இடங்கள் கூட நிரப்படப்படவில்ல்லை என்று தகவல் வெளியியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தமிழகத்தில் இரண்டாம் சுற்று பொறியியல் கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 323 கல்லூரிகளில் இதுவரை 10% இடங்கள் கூட நிரப்படப்படவில்ல்லை என்று தகவல் வெளியியாகியுள்ளது. 

தமிழகத்தில் பி.இ., பி.டெக். என பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வில் பொதுப்பிரிவு, தொழில் பிரிவு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 25 தொடங்கி அக்டோபர் 13 ஆம் தேதி வரை நடந்தது. 

இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதியான 31,095 பேரில் 24,430 பேர் பங்கேற்று கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். 

இரண்டு சுற்றுகள் கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் மொத்தமுள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் 323 கல்லூரிகளில் இதுவரை 10% இடங்கள் கூட நிரப்படப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

2- ஆம் கட்ட கலந்தாய்வு முடிவில் 12 கல்லூரிகளில் மட்டுமே 90% இடங்கள் நிரம்பியுள்ளன. 50% க்கும் அதிகமான இடங்கள் நிரம்பியுள்ள கல்லூரிகளின் எண்ணிக்கை வெறும் 48 மட்டுமே.  80 கல்லூரிகளில் ஒருவர்கூட சேரவில்லை. 

இரண்டாம் கட்ட கலந்தாய்விலும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி, கிண்டி பொறியியல் கல்லூரி, எஸ்எஸ்என் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. 

இரண்டு கட்ட கலந்தாய்வுகளிலும் சேர்த்து தற்போது வரை 27,740 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) குழு தகவல் தெரிவித்துள்ளது. 

நேற்று வியாழக்கிழமை தொடங்கிய மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கில் 49,043 மாணவர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அடுத்த இரண்டு சுற்றுகளில் காலியாக உள்ள 1,11,511 இடங்களுக்கு 1,10,701 மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. 

எனினும், நடப்பாண்டில் 65,000 இடங்கள் காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் கூறியுள்ளார். 

இரண்டு சுற்றுகளிலும் சிவில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் தேர்வு மிகவும் குறைவாக இருப்பதாகவும் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, செயற்கை நுண்ணறிவு, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் முன்னுரிமை தருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீப காலமாக பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்துள்ளது கல்வி வளர்ச்சியில் எதிர்மறையாக பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com