பழனி முருகன் கோயிலில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ரோப் கார், பாறை மீது உரசியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலைக்குச் செல்ல மின் இழுவை ரயில், ரோப் கார் உள்ளிட்ட சேவைகள் உள்ளன. இதில் ரோப் கார் சேவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படுகிறது. ரோப் காரில் ஒரு பெட்டிக்கு 4 பேர் வீதம் நான்கு பெட்டிகளில் 16 பேர் பயணம் செய்வர்.
தற்போது அங்கு கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் வருகையும் அதிகம் உள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் ஒரு ரோப் கார் பாறை மீது மோதியதால் உள்ளிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரோப் கார் நிறுத்தப்பட்டதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிக பாரம் காரணமாக ரோப் கார் தாழ்வாகச் சென்றதால் பாறை மீது மோதியது தெரிய வந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. ரோப் காரின் ஒரு பகுதி லேசாக சேதமடைந்தது. பின்னர் சிறிது நேரத்தில் நிலைமை சரிசெய்யப்பட்டது.