திருப்பூர் துணை ஆட்சியராக ஸ்ருதன்ஜெய் நாராயணன் புதன்கிழமை பொறுப்பேற்றார்.
ஸ்ருதன் ஜெய் நாராயணன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 75 ஆவது ரேங்க் பெற்றார். மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துணை செயலாளராக இருந்த ஸ்ருதன் ஜெய், கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பயிற்சி ஆட்சியராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்று வந்த துணை ஆட்சியர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருப்பூர் துணை ஆட்சியராக தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன்ஜெய் நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து புதன்கிழமை காலை துணை ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் கூறியதாவது:
திருப்பூர் மக்களின் நலன் சார்ந்தவையாகவே எனது முழு உழைப்பும் இருக்கும்.
மேலும், எனது பெற்றோர் திரைத்துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறு வயது முதலே கல்வியை முதன்மையாக போதித்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஸ்ருதன்ஜெய் கூறினார்.
பொதுவாக திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைவது வழக்கம் என்றாலும், நடிகர் சின்னிஜெயந்த் மகன் ஸ்ருதன்ஜெய் நாராயணன் குடிமையியல் தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்ய முன் வந்ததை அடுத்து தனித்து நிற்கிறார்.
ஸ்ருதன் மற்றும் அவரது தந்தை சின்னி ஜெயந்த் ஆகியோருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.