ராமநாதபுரம்: கோடியக்கரை அருகே நடுக் கடலில் 10 மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் காலில் குண்டு துளைத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரைக்காலில் இருந்து கடந்த 15 ஆம் தேதி ஒரு படகில் 10 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இன்று (அக். 21) நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது ஹெலிகாப்டரில் வந்த கடற்படையினர் படகை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால், படகு நிற்காமல் சென்றதால், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில், 10 மீனவர்கள் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து விமானப்படையினர், ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ் பருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்று காயத்துடன் இருந்த 10 மீனவர்களை அழைத்து வந்து முதலுதவி அளித்துள்ளனர்.
இதில், மயிலாடுதுறை மாவட்டம், மாணகிரி பகுதியைச் சேர்ந்த மீனவர் வீரவேல் காலில் குண்டு இருந்ததால் கடற்படையினர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கி சூடு இந்திய கடற்படையினர் நடத்தியதாக காயமடைந்த மீனவர் தெரிவித்த நிலையில், இந்திய கடற்படையினர் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறிய காயமடைந்த 9 மீனவர்கள் கடற்படை முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.