சென்னையில் காற்றின் தரம் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை நேற்று (அக்.24) கொண்டாடப்பட்டது. காற்று மாசு மற்றும் ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் வகையில், பட்டாசு வெடிப்பதற்கு தமிழக அரசு சார்பில் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இருப்பினும், நேரக் கட்டுப்பாட்டை மீறி அதிகளவிலான பட்டாசுகளை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
சென்னையில் மட்டும் கடந்த மூன்று நாள்களில் மட்டும் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தீபாவளி அன்று திங்கள்கிழமை காலை 6 மணிமுதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை சென்னையில் மிக மோசமான அளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த கால இடைவெளியில் மட்டும் காற்று மாசுபாட்டின் அளவு 345-லிருந்து 786ஆக அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் அதிகளவிலான வான வெடிகள் வெடித்ததால் காற்றில் அதிகமான ஈரத்தன்மை ஏற்பட்டதுடன், காற்றின் மிகக் குறைந்த வேகமும் காற்று மாசு அதிகரிப்புக்கு காரணமாக தெரிவித்துள்ளனர்.