அரசியலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரின் எதிர்காலம் பூஜ்யமாகத்தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் அவருக்கு சாதகமாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி இல்லம் முன்பாக குவிந்திருந்த அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளிக் குதித்தனர்.
எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச் செயலாளர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என கோஷங்கள் எழுப்பிய அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் பரிமாறிக் கொண்டும் ஊட்டிக் கொண்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் படங்கள் அடங்கிய பேனர்களுக்கு மலர் தூவி, பால் அபிஷேகம் செய்தனர்.
இதையும் படிக்க | அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இதைத் தொடர்ந்து, சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'அதிமுக பொதுக்குழு தொடர்பாக 2 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எழுச்சியோடு வரவேற்கும் விதமாக அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கிய மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் மற்றும் ஒற்றைத் தலைமை இபிஎஸ் என்பதை இந்த தீர்ப்பு உறுதிபடுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த தீர்ப்பால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செய்யப்பட்டது செல்லும் எனவும் அரசியலில் இனி ஓபிஎஸ் தரப்பினரின் எதிர்காலம் பூஜ்யமாகத் தான் இருக்கும் என விமர்சித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபி எஸ் தரப்பு உச்சநீதிமன்றம் சென்றால், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து எங்களது சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள் எனக் கூறினார்.
அதை தொடர்ந்து, பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தர்மம் ஜெயித்து விட்டது, இனி குழப்பத்திற்கு இடமில்லை என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.