திருச்சியில் இருந்து உதகைக்கு வந்த இரண்டு வியாபாரிகளுக்கு அரிவாள் வெட்டு ரூ 30லட்சம் ரொக்கத்துடன் தப்பி சென்ற மர்ம கும்பல் குன்னூர் அருகே பிடிபட்டது. இதுகுறித்த விபரம் வருமாறு:
திருச்சி அருகே மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் 55. இவரது மகன் யுவராஜ் 25 இவர்கள் இருவரும் உதகையில் இருந்து திருச்சிக்கு காய்கறி அனுப்பும் வியாபாரிகளுக்கு சேர வேண்டிய பணத்தை திருச்சியில் வசூல் செய்து ஞாயிற்றுக்கிழமை உதகையில் கொண்டு வந்து கொடுப்பார்கள். இதற்கு அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும். அதேபோல நேற்று இரவு ரூபாய் 30 லட்சம் டன் பேருந்தில் இன்று அதிகாலை உதகை வந்த நிலையில் அவர்களை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி விட்டு பணப் பையுடன் தப்பியுள்ளனர். அதிகாலை நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை என்ற நிலையில் அங்கிருந்த சிலர் காவல்துறையினருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் உதகையில் இருந்து வெளி மாவட்டம் செல்லும் அனைத்து சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
பின்னர் இந்த சோதனையில் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் அந்த கார் பிடிபட்டது. காரில் இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டதோடு அந்த ரொக்கமும் கைப்பற்றப்பட்டது. பிடிப்பட்ட மூவரும் விசாரணைக்கு உதகைக்கு கொண்டு வரப்படுகின்றனர். காயம் அடைந்த இருவருக்கும் உதகையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.