வேலூரில் மூளைச்சாவுற்ற சிறுவனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோர்

வேலூரில் மூளைச்சாவுற்ற 11 வயது சிறுவனின் இதயம் உள்பட உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானமாக வழங்கினார்கள்.
வேலூரில் மூளைச்சாவுற்ற சிறுவனின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோர்

வேலூர்: வேலூரில் மூளைச்சாவுற்ற 11 வயது சிறுவனின் இதயம் உள்பட உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானமாக வழங்கினார்கள்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொசவன் புதூர் கிராமத்தைச்  சேர்ந்தவர் கோவிந்தராஜ் - அர்ச்சனா தம்பதியினரின் மூத்த மகன் மகன் 11 வயதான சுதீஷ். கடந்த 4-ம் தேதி சாலையோரம் நடந்து சென்ற போது  வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று  சிறுவன் சுதீஷ் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர், அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். இதனையடுத்து சிறுவனின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.

அதன்படி இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல், இடது சிறுநீரகம், கண்கள்  வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும்,  வலது சிறுநீரகம் சென்னை எஸ்ஆர்எம்சி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தானமாக பெறப்பட்ட சிறுவன் சுதீஷின் இதயம் வேலூரில் இருந்து சென்னை அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனை வரை சுமார் 169 கிலோ மீட்டர் பயணிக்க உள்ளது. உடலில் இருந்து அகற்றப்பட்ட இதயம் 4 மணி நேரத்துக்குள் மற்றோருவருக்கு பொறுத்த வேண்டும் என்பதால் 1 மணி 30 நிமிடங்களுக்குள் இதயத்தை சென்னை கொண்டு செல்லும் சவாலான பணியினை ஆம்புலென்ஸ் ஓட்டுனர் நிஜந்தன் செய்ய உள்ளார்.

மாலை நேரம் என்பதால் தாமதம் ஏற்படாமல் இருக்க வேலூரில் இருந்து சென்னை வரை சாலையை காவல் துறையினர் சீரமைத்து தர உள்ளனர். பூந்தமல்லியில் இருந்து எம்ஜிஎம்  மருத்துவமனை வரை கிரீன் காரிடார் மூலம் போக்குவரத்து சீர் செய்யப்பட உள்ளது.

வழக்கமாக இந்த சாலையில் வேலூரிலிருந்து சென்னைக்கு பயணிக்க சுமார் 3 1/2 மணி நேரம் வரை எடுக்கும்.  மேலும் தற்போது வானம் மேகமூட்டதுடனும், சில இடங்களில் மழை பெய்து வருவதாலும் ஆம்புலென்ஸ் இயக்குவது ஓட்டுனர் நிஜந்தனுக்கு கூடுதல் சவாலாக அமையும்.

உடல் உறுப்பு தேவைபடுவோர் Transtan.in என்ற இணையம் மூலம் விண்ணபிக்கலாம். இது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு உறுப்பு மாற்று பதிவு ஆணையம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக மற்றும் தமிழகத்தில் மட்டுமே "விடியல்" என்ற செயலி மூலம் உடல் உறுப்பு முன்பதிவு செய்ய எளிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com