தேனியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதனின் அரசு குடியிருப்பில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜிநாதனின் குடியிருப்பில் தேனி லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயப்பிரியா தலைமையில் காவலர்கள் சோதனை நடத்தினர்.
பின்னர், பாலாஜிநாதனை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அலுவலக வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து, மீண்டும் பாலாஜிநாதனின் குடியிருப்புக்குச் சென்று காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையில், புதூர் பகுதியில் உள்ள பாலாஜிநாதனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகக் காவலர்கள் கூறினர்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வீடு மற்றும் அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.