சீர்காழியில் மக்கள் நீதி மையம் நிர்வாகி ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து பத்து கிலோ ஸ்வீட் மற்றும் காரம் ரூ.20 ஆயிரம் மதிப்புடைய எலக்ட்ரானிக் தராசு திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர் மக்கள் நீதி மையம் நிர்வாகி சந்துரு (51) இவர் நேற்று இரவு வழக்கம் போல் கடையைப் பூட்டி விட்டு இன்று காலை தாமதமாகக் கடையைத் திறந்தார்.
அப்போது கடையின் பக்கவாட்டு ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் ஆர்டருக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த லட்டு, ஜாங்கிரி, மிக்சர் ஆகிய 10 கிலோ எடையுள்ள பலகாரங்கள், மேலும் கடையிலிருந்த எலக்ட்ரானிக் தராசையும் மர்ம நபர் திருடிச் சென்றார்.
கடையிலிருந்த சிசிடிவி கேமராவை வேறு திசைக்குத் திருப்பி வைத்துவிட்டு இந்த திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடையில் மறுபுறம் இருந்த சிசிடிவி கேமராவை மர்ம நபர் கண்காணிக்கத் தவறியதால் அந்த சிசிடிவியில் திருடிய காட்சிப் பதிவாகி உள்ளது. இதனை வைத்து கடையின் உரிமையாளர் சந்துரு சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.