பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் பற்றி முதன்மைக் கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
'போதை இல்லா பாதை' எனும் அமைப்பின் மூலம் போதை ஒழிப்புக்காக தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம், வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி சென்னையிலிருந்து தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான போஸ்டரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பை மாணவர்கள் உணர்வதில்லை. இதுபோன்ற போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவர்களை நேரில் சென்று அணுக வேண்டும். மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவதை அவமானமாகக் கருதக்கூடாது. சிற்பி என்ற மாணவர் அமைப்பு மூலம் போதை தடுப்பு விழிப்புணர்வு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.
பள்ளிகளில் பிரச்சனை இருந்தால் மாணவர்கள் 1447 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம். பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் பற்றி முதன்மைக் கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அன்றைய தினம் 12 மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்பது குறித்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பன்றிக் காய்ச்சல் பரவுவதால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 'அதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்' என்றார்.
இதையும் படிக்க | சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகக் காரணம் என்ன?