காரைக்குடி அருகே நாட்டுதுப்பாக்கியால் மாமனாரை சுட்டு விட்டு குடிகார மருமகன் தப்பி ஓட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூர் பகுதியில் ராக்கம்மாள் - ராமச்சந்திரன் தம்பதியினர் வசித்து வருகின்றனர். ராமச்சந்திரன் கூலி வேலை செய்துவிட்டு நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோவம் அடைந்த மனைவி இராக்கம்மாள் தனது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். இரண்டு தினங்களாகியும் கணவனின் நடவடிக்கையில் மாற்றம் இல்லாததால் ராக்கம்மாள், காரைக்குடியில் உள்ள தனது மாமியாரை சந்தித்து தனது கணவரின் நடத்தை குறித்து புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க | கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் பரிமாறப்பட்ட உணவு: விடியோ வைரல்
இந்நிலையில் ராக்கம்மாள் காரைக்குடி சென்றது அறியாத அவரது தங்கை மற்றும் தந்தை இருவரும் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று அவரை கண்டித்துள்ளனர். இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ராமச்சந்திரன் தனது மைத்துனியை வீட்டில் பூட்டிவிட்டு வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியால் மாமனார் நாகப்பனை சுட்டுவிட்டு தப்பி ஓடினார்.
விலா எலும்பில் குண்டு பாய்ந்த நிலையில் அலறியபடி கீழே சாய்ந்த நாகப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த குன்றக்குடி காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராமச்சந்திரனை தேடி வருகின்றனர். மாமனாரை குடிகார மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.