தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கலாக்ஷேத்ரா, பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரங்களில் உரிய நடவடிக்கை மனித உரிமைகள் ஆணையத் தலைவா்

கலாக்ஷேத்ரா, கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரங்களில், ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

News image
Updated On :13 ஏப்ரல் 2023, 11:53 pm

DIN

கலாக்ஷேத்ரா, கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரங்களில், ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் எஸ்.பாஸ்கரன் கூறினாா்.

தமிழ்நாடு மற்றும் ஒடிஸா மாநில மனித உரிமைகள் ஆணையங்கள் இணைந்து, தமிழ்நாடு மாநில அரசின் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் ஒடிஸா மாநில அரசின் தொழிலாளா் துறை இடையிலான ’புலம்பெயா் தொழிலாளா்களின் பாதுகாப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச்சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் அரங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் எஸ்.பாஸ்கரன், ஒடிஸா மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் சத்ருஹன புஜாரி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினா்கள் ராஜ இளங்கோ, கண்ணதாசன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

நிகழ்ச்சிக்குப்பிறகு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பாஸ்கரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, ஒடிஸா மாநில அரசு இணைந்து இரு மாநில தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்து புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடவுள்ளது.

இது குறித்த கருத்துரு அடங்கிய அறிக்கை இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்று புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகும்.

இதன் மூலம், இரு மாநில தொழிலாளா்கள் பலனடைவா். குறிப்பாக, ஒடிஸாவில் உள்ள தமிழக தொழிலாளா்களுக்கும், தமிழகத்தில் உள்ள ஒடிஸா தொழிலாளா்களுக்கும் பணியிட பாதுகாப்பு மற்றும் பணியிட மேம்பாடு குறித்த இந்த ஒப்பந்தம் பயன்படும். பிற மாநிலங்களுடனும் இம்மாதிரியான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

மேலும், கலாக்ஷேத்ரா விவகாரம், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, அவா் பதில் அளிக்கும்போது, ‘இந்த இரு விவகாரங்கள் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா் அவா்.

முன்னதாக, ஆணைய செயலாளா் கே.விஜயகாா்த்திகேயன் வரவேற்றாா். ஒடிஸா மாநில அரசின் தொழிலாளா் துறைச் செயலாளா் சந்தானகோபாலன், ஆணையா் டாக்டா் திருமலா நாயக், மனித உரிமைகள் ஆணையத்தின் புலனாய்வுத் துறை இயக்குநா்கள் பிரனபிந்து ஆச்சாா்யா (ஒடிஸா), டாக்டா் மகேந்தா் குமாா் ரத்தோட் (தமிழ்நாடு), காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.