அனைத்து மாநில மொழிகளிலும் சிஆர்பிஎஃப் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பை வரவேற்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய ஆயுதப்படையில் ஆயுதப்படை காவலர் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடைபெற்று வந்த நிலையில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கேணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் தனது பதிவில், 'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் எழுதிய கடிதத்தின் எதிரொலியாக, மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளிலும் சிஆர்பிஎஃப் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். அனைத்து மத்திய அரசு தேர்வுகளிலும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்குவதற்கான எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.