'தீ பரவட்டும்' என்கிற ஹேஸ்டேக்கை பதிவிட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போன்று பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 'தீ பரவட்டும்' என்கிற ஹேஸ்டேக்கை பதிவிட்டு கேஜரிவாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் தீர்மானத்தைப் பாராட்டி, எங்கள் முயற்சியில் தாங்களும் இணைந்துகொண்டதற்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு நன்றி.
ஆம், எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டப்பேரவையின் இறையாண்மைதான் உச்சமானது. நியமனப் பதவியில் இருக்கும் ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் சட்டமியற்றும் அதிகாரத்தையும் பொறுப்புகளையும் சிறுமைப்படுத்தக் கூடாது. தீ பரவட்டும் என்று கூறியுள்ளார்.