திண்டுக்கல்: திண்டுக்கல் முத்தழகுப்பட்டி செபாஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு 1000 ஆடுகள், 3ஆயிரம் கோழிகளை பலியிட்டு மாபெரும் அசைவ விருந்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை நடைபெறுகிறது.
செபாஸ்தியார் ஆலய திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருப்பலியைத் தொடர்ந்து, காணிக்கைப் பவனி நடைபெற்றது.
இதில் திண்டுக்கல், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நேர்த்திக் கடனாக ஆடுகள், கோழிகள் கொண்டு வந்தனர். மேலும் பலர் அன்னதான விருந்துக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அனைத்து தரப்பினரும் விருந்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, ஹலால் முறையில் ஆடுகள் வெட்டப்பட்டன.
1000 ஆடுகள், 3ஆயிரம் கோழிகள்:
செபாஸ்தியார் ஆலய வளாகத்தில் காணிக்கையாக வழங்கப்பட்ட 1000 ஆடுகள், 3ஆயிரம் கோழிகள், 4 டன் அரிசி, 3 டன் காய்கனிகள், மளிகை சாமான்களை பயன்படுத்தி அசைவ விருந்து தயாரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
செவ்வாய்க்கிழமை மாலை மன்றாட்டு ஜெபம், வேண்டுதல் பூசைக்கு பின், மாபெரும் அசைவ விருந்து பரிமாறப்படுகிறது. பந்திக்கு 1000 பேர் வீதம் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விடிய விடிய நடைபெறும் இந்த விருந்தில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என விழாக் குழுவினர் தெரிவித்தனர்.