காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை 4.00 மணிக்கு வினாடிக்கு 611 கன அடியாக சரிந்தது.
நீர் வரத்து சரிந்த நிலையில் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 14,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நேற்று மாலை 4.00 மணிக்கு 65.01அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு 63.38 அடியாக சரிந்தது.
ஒரே நாளில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 1.63 அடி சரிந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 27.27 டிஎம்சியாக உள்ளது.
கடந்த வாரத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
பருவமழை கை கொடுக்கும் என்று காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்த நிலையில் பருவமழை திடீரென நின்று போனது.
இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் கிடைக்குமா என்று காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.