நீலகிரி மாவட்டம் தெப்பாக்காடு யானைகள் முகாமில் தற்காலிக பராமரிப்பாளராக பணியாற்றி வரும் பெள்ளிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில், நீலகிரி மாவட்டம், தெப்பாக்காடு யானைகள் முகாமில் தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றி வந்த பெள்ளிக்கு, முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டதற்கான பணி நியமன ஆணையை வழங்கினார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல்வர்.
இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள வி. பெள்ளிக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் உள்ள யானைகளை தனிகவனத்துடன் அவர்கள் பராமரித்து வருகின்றனர்.
பாகன்கள் மற்றும் காவடிகளின் பணிகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 91 பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கியுள்ளதோடு, சூழலுக்கியைந்த சமூக இணக்கமான வீடுகள் ரூ.9.10 கோடி செலவில் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடியும், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோழிகமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வர் நீலகிரி மாவட்ட வருகையின் போது தெப்பக்காடு யானைகள் முகாம் மேம்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
தற்போது, தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் வி. பெள்ளி, அனாதையான யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கருத்தில்கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் காவடியாக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிநியமன ஆணையினை முதல்வர் ஸ்டாலின் இன்றைய தினம் வி. பெள்ளி அவர்களுக்கு வழங்கினார்.