விராலிமலை: விராலிமலை அருகே கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் வீரபத்திரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா நள்ளிரவு விடிய விடிய நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி வழிபாடு நடத்தினர்.
இதில் விசேஷ வழிபாடாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டு சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையொட்டி, இந்த கோயிலுக்கு தேனி மாவட்ட பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வரிசையாக சன்னதி முன்னால் தரையில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து கோயில் பூசாரி, பக்தர்களின் ஒவ்வொருவர் தலையிலும் தேங்காயை உடைத்து ஆசீர்வாதம் வழங்கினார்.
பல்வேறு விதமான வழிபாடுகளில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவது வினோத வழிபாடாக பார்க்கப்படுகிறது