மீண்டும் பயன்பாட்டில் பயோமெட்ரிக் கருவிகள்: இன்று முதல் எந்த நியாயவிலைக் கடையிலும் பொருள்களை வாங்கலாம்

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் கருவிகள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) முதல் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் கருவிகள், ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) முதல் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதையடுத்து, எந்த நியாய விலைக் கடையிலும் பொருள்களை குடும்ப அட்டைதாரா்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப். 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை நியாய விலைக் கடைப் பணியாளா்கள் வீடு வீடாக விநியோகம் செய்தனா்.

பயோமெட்ரிக் கருவிகள்: பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், முகாம்களுக்கு விண்ணப்பதாரா்கள் வர வேண்டிய தேதி, நேரம் ஆகிய விவரங்கள்அடங்கிய டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. முகாம்களில் விண்ணப்பங்களை பெறும் பணி கடந்த ஜூலை 24-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டம் நியாயவிலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரா்களின் விவரங்கள் அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, பயோமெட்ரிக் கருவிகளில் விண்ணப்பதாரா்கள் தங்களது கை விரலைப் பதிந்தவுடன் அவா்கள் குறித்த விவரங்கள் முகாமில் உள்ள தன்னாா்வலா்களின் கையடக்கக் கணினியில் பெறப்படும். இதற்காக, தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளின் பயோமெட்ரிக் கருவிகள் இந்த முகாம்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்த கருவிகளைக் கொண்டு, மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப் பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொருள்கள் பெற முடியாத நிலை: நியாயவிலைக் கடைகளில் பயோ மெட்ரிக் கருவிகள் இல்லாததால், பதிவேட்டில் கையொப்பமிட்டு குடும்ப அட்டைதாரா்கள் பொருள்களை வாங்கி வருகின்றனா். பயோமெட்ரிக் கருவிகள் பயன்பாட்டில் இருக்கும்பட்சத்தில், எந்தக் கடையில் வேண்டுமானாலும் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். நியாய விலைக் கடைகளில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக பயோ மெட்ரிக் கருவிகள் இல்லாததால், குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு மட்டுமே சென்று பொருட்களை வாங்கும் நிலை இருந்து வந்தது.

பாசறை திரும்பும் கருவிகள்: மகளிா் உரிமை தொகைத் திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வரும் பயோமெட்ரிக் கருவிகள், ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்படவுள்ளன.

இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

விண்ணப்பப் பதிவு தொடங்கிய காலத்தில், நியாய விலைக் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் கருவிகளின் தேவை இருந்தது. இப்போது, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சாா்பில் பயோமெட்ரிக் கருவிகள் தனியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், வேளாண்மை போன்ற சில துறைகளிலும் பயோமெட்ரிக் கருவிகள் கையிருப்பில் உள்ளன. இந்தக் கருவிகள் இப்போது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதால், நியாய விலைக் கடைகளின் பயோமெட்ரிக் கருவிகளின் தேவை இனி இருக்காது.

எனவே, முதல் கட்ட விண்ணப்பப் பதிவுக்கு மட்டுமே நியாய விலைக் கடைகளின் பயோமெட்ரிக் கருவிகளின் தேவை இருக்கும். அடுத்தடுத்த கட்டங்களுக்கான விண்ணப்பப் பதிவுக்கு தேவைப்படாது என்பதால் அவை அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முதல் நியாய விலைக் கடைகளுக்கே கொண்டு செல்லப்படவுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com