காவிரி நீர் முறைப்படி திறக்காத காரணத்தினால் தஞ்சையில் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையில் இருந்து சென்னைக்குச் செல்ல விமான நிலையம் வந்த அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
பட்டியல் இன மக்களுக்கான நிதியை மாற்றி மகளிர் உரிமைத் தொகைக்கு வழங்குவது குறித்த கேள்விக்கு,
பட்டியலின தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமைத்தொகைக்கு ஒதுக்கி இருந்தால் அது சட்டப்படியான குற்றமாகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வாழ்க்கையின் அடித்தளத்தில் இருக்கும் மக்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை விதியை மீறி ஒதுக்கியது தவறு.
தஞ்சையில் குருவை நெல் சாகுபடி பயிர்கள் கருகியதற்கு முழுமையான காரணம் திமுக அரசு தான். ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் கர்நாடக அணையிலிருந்து நமக்கு வரக்கூடிய தண்ணீர் விடுவிக்காத காரணத்தினால் தான் தஞ்சையில் உள்ள பயிர்கள் கருகி போகும் சூழல் உள்ளது. இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும்.
என்எல்சி பிரச்னையில் பயிர்கள் அழிக்கப்பட்டதற்கு ஏக்கருக்கு ரூ. 40,000 வழங்க என்எல்சி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதே போல காவிரி நீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பீடு வழங்க வேண்டும். இதுவே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாகவும் உள்ளது.
கடந்த 2007 இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வந்த போது, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்தார். காவிரியில் அவர்கள் வழங்கும் நீர் நமக்கு போதாது. தமிழகத்திலும், மத்தியிலும் ஆளும் பொறுப்பில் இருக்கும் நீங்கள் உங்களது செல்வாக்கை பயன்படுத்தி மத்திய அரசிடம் அரசாணை பெற்று தர வேண்டும். அப்போதுதான் அந்த தீர்ப்பு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவித்தார்.
உடனே அப்போது அமைச்சராக இருந்த துரைமுருகன் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வழக்காக எடுத்துச் செல்ல முடியாது. அதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என்றார். ஆனால் கர்நாடக அரசு எங்களுக்கு இந்த நீர் போதாது, பெங்களூரு பகுதிக்கு குடிநீர் தேவைக்காக அதிகப்படியான நீரை வழங்க வேண்டும் என வழக்கு தொடுத்ததன் பெயரில் உச்ச நீதிமன்றம் பெங்களூருக்கு கூடுதலாக தண்ணீர் ஒதுக்கீடு செய்து தீர்ப்பளித்தது.
காவிரி பிரச்சனையில் திமுக அரசு பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட காரணத்தினால் தற்போது பயிர்கள் கருகும் சூழ்நிலை உள்ளது என அங்கிருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் திமுக அரசு. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பினை மத்திய, மாநிலத்தில் ஆளுகிற பொறுப்பில் இருந்த திமுக அரசு நிறைவேற்ற வில்லை. 2014 இல் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, நான் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தும் நடைபெறவில்லை.
இதையும் படிக்க: உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் டிஜிபி ஆஜர்
இதை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். இந்த வரலாற்றை மறைத்து விட்டு இன்று எங்களுக்கு வரலாறு தெரியவில்லை என்று துரைமுருகன் கூறி இருக்கிறார். நாங்கள் அதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.