வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி கடல் பரப்புக்குள் இன்று(ஆக. 9) காலை வந்த இலங்கையைச் சேர்ந்த மூவரை போலீஸார் படகுடன் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வேதாரண்யம், மணியன் தீவுக்கு கிழக்கே சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடல் பரப்புக்குள் மூவர் பயணிக்கும் படகு நிற்பதாக மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் இன்று காலை ஒரு படகில் சென்ற கடலோரக் காவல் நிலைய போலீஸார் அவர்களை கைது செய்து படகுடன் கரை சேர்த்தனர்.
விசாரணையில் தங்களை மீனவர்கள் என்று தெரிவித்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித்துறை படகுத்துறையில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டதாகவும், படகு திசை மாறியதால் இங்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள மூவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.