

சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்கான பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகா் பேருந்து நிலையம் கட்டும் பணி 2019 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தின் பணி 99 சதவீதம் நிறைவடைந்த நிலையில், சில நாள்களில் திறக்கப்படவுள்ளன.
தென் மாநிலங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் அமைந்துள்ளதால், நகர்ப் பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் வருவோர் பெரும்பாலும் சாலை வழியாகதான் பயணிக்க வேண்டும்.
இதனால், ஜிஎஸ்டி சாலையில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் கட்டப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்கட்டமாக கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 40 லட்சத்தை ரயில்வே நிர்வாகத்திடம் தமிழக அரசு கொடுத்துள்ளதாகவும், ஒப்பந்தம் நிறைவு செய்யப்பட்டவுடன் ஓராண்டில் கட்டுமானப் பணிகள் முடிவடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.