அவிநாசி: அவிநாசி அருகே கானூரில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் எரிவாயு உருளை வெடித்து வெளிமாநில தொழிலாளி வெள்ளிக்கிழமை பலியானார். மேலும் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவிநாசி அருகே கானூரில் உள்ள இரும்பு உருக்காலை செயல்பட்டு வருகிறது. இதில் வெளி மாநில தொழிலாளிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல நிறுவனம் இயங்கத் தொடங்கியது. திடீரென நிறுவனத்திற்குள் இருந்த எரிவாயு உருளை வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த ராம்விலாஸ் மகன் ராஜேஷ்(22) சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேவூர் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.