அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகிற ஆகஸ்ட் 25 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்ட (பிஎம்எல்ஏ) வழக்கில் அமலாக்கத் துறை காவலில் எடுப்பதற்கு எதிராக அமைச்சா் செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா தரப்பில் தாக்கலான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் செந்தில் பாலாஜியை 5 நாள்கள்(ஆக. 12 வரை) அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிப்பதற்கு கடந்த திங்கள்கிழமை அனுமதி அளித்தது.
பின்னர் அமலாக்கத்துறை அளித்த மனு தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜியை 5 நாள்கள்(ஆக. 12 வரை) காவலில் எடுக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து, செந்தில் பாலாஜி இன்று(சனிக்கிழமை) சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, மேலும் 5 நாள்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கையை நீதிபதி மறுத்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பான 3,000 பக்க குற்றப்பத்திரிகையையும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது, குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.