புளியம்பட்டி காவலர் குடியிருப்பில் தலைமைக் காவலர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் கொடிவேல் (40). இவர் குடும்பத்துடன் புளியம்பட்டி காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று கொடிவேல் சடலத்தைக் கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சனை காரணமாக கொடிவேல் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பாக மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார் . காவலர் குடியிருப்பில் தலைமை காவலர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.