சுதந்திர நாளில் மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதத்தைப் போக்கி அன்பு, வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்போம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நாட்டின் சுதந்திர நாள் இன்று (ஆக. 15) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரதமா் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சுதந்திர நாளையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்று காலை தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
'நீங்கள் சமூக சுதந்திரத்தை அடையாத வரை, சட்டத்தால் வழங்கப்பட்ட சுதந்திரத்தால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை - அம்பேத்கர்.
சுதந்திரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தை நாம் கொண்டாடும் இந்த வேளையில், நம் நாட்டின் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம். இந்தியாவின் ஜனநாயகம், ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை ஆகிய நமது அரசியலமைப்பின் இலட்சியங்களைப் பாதுகாக்க நாம் ஒன்றாக இணைந்து நிற்போம்.
மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் - வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் - அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்!' என்று பதிவிட்டுள்ளார்.