
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், வெள்ளிக்கிழமை காவிரி நீர் பிரச்னையில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு , காவிரி நதி நீர் ஆணையம் , கர்நாடக அரசின் போக்கினை கண்டித்து கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி மேலராஜ வீதி தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வி.அய்யப்பன் தலைமை வகித்தார். சங்க செயலர் ராஜா, பொருளாளர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கோரிக்கைகள்:
நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், காவிரி குறுக்கே மேக்கே தாட்டில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்தும், நடுநிலை தவறி நடக்கும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்தும், காவிரி பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசு நெல், கரும்புக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கையை விளக்கி, மன்னார்குடி லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசகர் ஆர்.வி. ஆனந்த், முன்னாள் பொருளாளர் எஸ். செந்தில்குமார், நிர்வாகி எஸ் சத்தியமூர்த்தி, லாரி ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகி ஏ .அசோகன், உள்ளிட்டோர் பேசினர்.
இதில், சங்கத்தின் துணைத் தலைவர் ராஜாராமன், துணைச் செயலர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட வர்கள் மன்னார்குடி வஉசி சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் இருந்து பச்சை துண்டு அணிந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பிய படி ஊர்வலமாக காந்தி சாலை, பந்தலடி, காமராஜர் சாலை, வழியாக மேலராஜ வீதி அஞ்சல் நிலையம் வந்தடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.