வெம்பக்கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவுற்ற நிலையில், அங்கிருந்து 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், இதே இடத்தில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதி தொடங்கப்பட்டு, இதுவரை 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இங்கிருந்து சுடுமண்ணாலான புகைப்பிடிப்பான், பெரிய தட்டு, தக்களி பானை, தோசைக் கல், இலை வடிவிலான அச்சு உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை(ஆக.11) அகழாய்வின் போது, சங்கு கலைப் பொருள்கள் உற்பத்திக் கூடத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு, வெள்ளை நிறத்துடன் கூடிய சதுரம், உருண்டை வடிவிலான மெருகூட்டும் கற்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சல்லடை, பானை உள்பட 10-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
40 விழுக்காடு மட்டும் தங்கம் கலக்கப்பட்ட தாலி நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டது. இந்தத் தங்கத் தாலி 3 கிராம் எடை இருக்கும் எனவும், முன்னோா்கள் தங்கம் கலக்கப்பட்ட தாலியைப் பயன்படுத்தி வந்திருக்கலாம் என்றும் தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற அகழாய்வு பணியின்போது செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.