மதுரை : அதிமுகவின் பொன்விழா மாநாடு மதுரை அடுத்த வலையங்குளத்தில் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, காலை 8. 45 மணிக்கு மாநாடு அரங்கத்தின் வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த 51 அடி உயரத்திலான கொடிக்கம்பத்தில் அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
அப்போது, ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன. எடப்பாடி கே. பழனிசாமிக்கு வெள்ளி செங்கோல் வெள்ளிவாள் என, பல நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிமுக மாநாட்டையொட்டி தொடர் ஓட்டமாக கொண்டு வரப்பட்ட மாநாட்டு ஜோதி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், அதிமுக வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை அவர், திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொற்கிழி வழங்கி கௌரவித்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த தலா 10 பேர் என 100 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
முன்னதாக, அதிமுக பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் சுமார் 3,000 பேர் அணிவகுத்து நின்று எடப்பாடி கே. பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.