தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு தொடங்கப்படுவதாக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
சென்னை மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் செயல்படும் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் பிரிவுகளில் பட்டயப்படிப்பு தொடங்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன் இ.ஆ.ப விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை பண்பாட்டுத்துறையின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயமுத்தூர் மற்றும் திருவையாறு ஆகிய இடங்களில் இசைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் இசை மற்றும் நாட்டிய பிரிவுகளில் மூன்றாண்டு பட்டயப்படிப்புகள் மற்றும் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. குரலிசை, வயலின், வீணை மற்றும் பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புகள் உள்ளன.
இவ்வாண்டு சட்டபேரவையில் சென்னை மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் பிரிவுகளில் பட்டப்படிப்பு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சட்டமன்ற அறிவிப்பினை செயல்படுத்தும் வண்ணம் 2023-2024 கல்வியாண்டு முதல் நாதஸ்வரம், தவில் பிரிவுகளில் பட்டப்படிப்பு தொடங்கிடஅரசாணை வெளியிடப்பட்டது..
சென்னை மற்றும் திருவையாறு இசைக் கல்லூரிகளில் நாதஸ்வரம் மற்றும் தவில் பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கு சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இப்பிரிவுகளில் சேர விரும்புவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
இதையும் படிக்க: காவிரி வழக்கை விசாரிக்கும் புதிய அமர்வு அறிவிப்பு!
இணையத்தள முகவரி www.artandculture.tn.gov.in . விண்ணப்பங்கள் 31.08.2023 மாலை வரை அளிக்கலாம். நேரில் விண்ணப்பம் அளிக்க விரும்புவோர் முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி , டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை , இராஜ அண்ணாமலைபுரம், சென்னை-600028 தொலைபேசி எண் 044-24937217 அல்லது முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, திருவையாறு - தஞ்சாவூர் மாவட்டம்-613204 தொலைபேசி எண் 04362-261600 அணுகலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.