கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கணவனை கொன்று மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அருகே உள்ள காரச்சி கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (40). எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி ஜெயந்தி (36). கடந்த சில மாதங்களாகவே கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், ஜெயந்தி, மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், ஜெயந்தி, வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். ரங்கசாமி, அவரது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.
தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு சென்று இரு சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஜெயந்தி, கணவன் ராமசாமியை கொன்று, தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
மன நலம் பாதிக்கப்பட்ட பெண், கணவனைக் கொன்று, தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.