என்.ஐ.ஏ.விடம் இருந்து தனக்கு சம்மன் ஏதும் வரவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
கேரளாவின் விழிஞ்சம் கடல் பகுதியில் 2021ம் ஆண்டு 327 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்டவை கடலோர பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் ஆதிலிங்கம் என்பவரை சென்னையில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமி உதவியாளராக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக எனக்கு எந்த சம்மனும் அனுப்பப்படவில்லை என நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.