கோவை: கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் துவங்கி 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நூற்றுக்கு மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மலை ரயிலில் இலவசமாக பயணம் மேற்கொண்டனர்.
தனது நண்பர்களுடன், மலை ரயிலில் அவர்கள் உற்சாகமாகப் பயணித்து மகிழ்ந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் இரயில் நிலையம் கடந்த 1873 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் துவங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ரயில் நிலையம் துவங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் இன்று உதகை மலை ரயிலில் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
உதகை மலையில் சிறப்பு ரயிலானது மாணவர்களை அழைத்துக் கொண்டு கல்லாறு ரயில் நிலையம் வரை சென்று மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
150வது ஆண்டு விழாவை முன்னிட்டு பழங்காலத்தில் ரயில்வேயில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு இயந்திரங்கள் சிக்னல் கருவிகள் மற்றும் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.